Monday, October 31, 2011

ஏற்றுமதி உலகம் 16

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



ஏற்றுமதி இறக்குமதி உலகத்தை வாரா வாரம் வேறு எந்த இணையதளமும் தொட்டதாக தெரியவில்லை. அந்தப் பெருமை உங்கள் இணையதளத்தையே சாரும் என்று வரும் கடிதங்கள் மகிழ்ச்சிப்படுத்துகின்றன. சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

2300 கலைஞர்கள், 950 பொருட்கள் என களைகட்டியது டெல்லியில் சமீபத்தில் நடந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி. இதில் முக்கிய அம்சம் வெளிநாட்டை சேர்ந்த 5000 பார்வையாளர்கள் கலந்துகொண்டது தான். இது இந்திய கைவினைப்பொருட்களுக்கு உலகளவில் உள்ள மதிப்பை காட்டுகிறது. இந்த கண்காட்சி வர்த்தக நோக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற முறையில் நடந்தது. இது போன்ற கண்காட்சியில் கலந்து கொள்வது உங்களுக்கு நல்லது, நிறைய ஐடியா கிடைக்கும்.


பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்

இதுவரை ஈகாமர்ஸ்  இணையதளங்களின் மூலம் விற்கும் போது 500 டாலர் வரையே பே பால் மூலமாக பெறமுடியும் என்ற தடை இருந்தது. அதாவது 500 டாலருக்கு மேல் இ பே போன்ற இணையதளங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பொருட்களுக்கு பணம் பே பால் மூலமாக வாங்க முடியாது என்று இருந்ததை, தற்போது 3000 டாலராக ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.


புளி ஏற்றுமதி

முன்பெல்லாம் ஒரு கிராமத்தையும், இன்னொரு கிராமத்தையும் இணைக்கும் ரோட்டின் இருபுறங்களிலும் புளிய மரங்களை தான் நடுவார்கள். நிழலுக்கும் நிழல், வருமானத்துக்கும் வருமானம், மண் அரிப்பையும் தடுக்கும், அதிக நீரும் தேவையில்லை, நீண்டகாலம் பயன்தரும். கடந்த 22 மாதத்தில் புளி விலை மூன்று மடங்காக கூடியுள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்தது, உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. கடந்த வருடத்தில் 17500 டன் புளி ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மதிப்பு 80 கோடி ரூபாய்கள் ஆகும். நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பங்களாதேஷ், பாகிஸதான், மலேஷியா, வளைகுடா நாடுகள். காலியாக இருக்கும் இடத்தில் புளியமரம் வளர்க்கலாமே?


ஜீரா ஏற்றுமதி

இந்திய ஜீரா விலை உலகளவில் மற்ற நாடுகளை வைத்துப் பார்க்கும் போது குறைவாக இருக்கிறது. அதாவது இந்திய ஜீரா ஒரு டன்னுக்கு3200 டாலருக்கு விற்கப்படுகிறது. அதே சமயம் சிரியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜீரா 3450, 3500 டாலர் ஒரு டன்னுக்கு விலை கூறப்படுகிறது. ஆதலால், இந்திய ஜீராவிற்கு மதிப்பு கூடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுவதில்லை. அதிகளவில் ராஜஸதான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது.


செப்டம்பர் மாத ஏற்றுமதி

இந்த செப்டம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருடம் செப்டம்பர் மாத ஏற்றுமதியை விட 36     சதவீதம் கூடி 24.8     பில்லியன் டாலர் மதிப்பிற்கு (        121,520 கோடி ரூபாய் மதிப்பிற்கு) ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை என்று எடுத்துக் கொண்டால் 52 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். அதுவும் ஒரு மாதத்தில் 82 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். இந்த அளவு ஏற்றம் ஒரு மாதத்தில் சீனாவில் கூட இருந்ததில்லை. இந்த முழு வருடத்திற்கும் 300 பில்லியன் டாலர் ஆக உள்ள ஏற்றுமதி அளவை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் சாப்ட்வேர் ஏற்றுமதி கணக்கில் இல்லை (அதாவது சர்வீசஸ ஏற்றுமதி). 


ஏற்றுமதி புள்ளி விபரங்கள் தவறா?

அரசாங்கம் கொடுக்கும் ஏற்றுமதி புள்ளி விபரங்களும், ஒவ்வொரும் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி ஆகும் சரக்குகளின் மதிப்பையும் கூட்டி பார்க்கும் போது அவை இரண்டும் சரிசமமாக வரவில்லை. அரசாங்கம் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. புள்ளி விபரங்கள் சரிவர தரப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும்.


வெளிநாட்டு வர்த்தக கொள்கை

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தியமைக்கப்பட்டு கடந்த வாரம் வெளியானது. அதில் ஏற்றுமதியாளர்களுக்கு 900 கோடி ரூபாய்கள் வரை சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனிகளுக்கு செய்யப்படும் அப்பாரல் ஏற்றுமதிகளுக்கு 2 சதவீதம் ஏற்றுமதி மதிப்பில் கிடைக்கும். சில ஏற்றுமதி பொருட்களுக்கு 2 சதவீதம் சரக்குக் கட்டணத்தில் திருப்பி அளிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சரக்குக் கட்டணத்தில் 1 சதவீதம் திருப்பி அளிக்கப்படும் போன்றவை முக்கியமானவை ஆகும்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர்
ஈரோடு
கேள்வி

ஏற்றுமதி சரக்குகளை விமானம், கப்பல் மூலமாக தான் அனுப்ப முடியுமா? லாரி, டிரக் வழியாக அனுப்ப இயலாதா?

பதில்
ஏற்றுமதி சரக்குகளை தாராளமாக லாரி, டிரக் ஏன் போட் மூலமாக கூட அனுப்ப இயலும். ஏற்றுமதி செய்யப்படும் நாட்டிற்கும், இறக்குமதி செய்யப்படும் நாட்டிற்கும் இடையே தரை வழி இருந்தால் லாரி, டிரக் மூலமாக சரக்குகள் அனுப்பப்படலாம். உதாரணமாக இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு சரக்குகள் லாரி, டிரக் வழியாக நிறைய அனுப்பப்படுகிறது. இது போல ஐரோப்பிய நாடுகளுக்குள் தரை வழி போக்குவரத்து அதிகமாக உள்ளது. சில சமயம் கப்பல் மூலம் சரக்குகள் அனுப்பும் போது செலவுகள் அதிகமாக இருக்கும். ஆதலால், சரக்குகள் போட் மூலமாக அனுப்பப்படும். உதாரணமாக பாகிஸதான் நாட்டிலிருந்து துபாய் போன்ற இடங்களுக்கு போட் மூலம் சரக்குகள் அனுப்பப்படுகின்றன.


இந்த வார இணையதளம்

http://www.e-tendering.com/

ஆசிய அளவில் வெளிவரும் ஈ-டெண்டர்கள் எல்லாவற்றையும் தொகுத்து தரும் இணையதளம். குறிப்பாக ஹாங்காங், சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் வழங்கும் ஈ-டெண்டர்கள் இதில் இருக்கும். பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இலவச ட்ரையல் மற்றும் டெமோ வசதியுள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

No comments:

Post a Comment